மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி

ராஜபாளையம், மே 22: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (36). கூலி தொழிலாளியான இவர் மாடு மேய்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன் தினம் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். மாலையில் மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்த போது, 3 மாடுகளை காணவில்லை. இதனால் மாடுகளை தேடி தனது நண்பர்கள் சிலருடன் மாரியப்பன் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தோப்பு பகுதிக்கு சென்றுள்ளார். ராஜபாளையம் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே உள்ள கணேசராஜா என்பவரது தோப்புக்கு சென்ற போது, வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் உயர் மின்சாரம் பாய்ந்ததால் மாரியப்பன் உயிரிழந்ததாக கூறி, உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் நேற்று முன் தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்வேலி அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். ராஜபாளையம் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து மாரியப்பனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை