மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு ஆரணி அருகே

திருவண்ணாமலை, ஜன.13: ஆரணி அருகே பெற்ற மகளிடமே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த குன்னத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(47). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். எனவே, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டு, நடக்க இயலாத நிலையில் உள்ளார். இந்நிலையில், கடந்த 10.7.2020 அன்று வீட்டில் தனியாக இருந்த தனது 13 வயது மகளை மிரட்டி, கன்னியப்பன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே, அச்சமடைந்த சிறுமி, இதுபற்றி வெளியில் சொல்லாமல் தவிர்த்துள்ளார். இந்த கொடூரம் நடந்த சில மாதங்களுக்கு பிறகு, சிறுமி கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு வயிற்றில் கட்டி ஏதேனும் வளர்ந்திருக்கலாம் என சந்தேகப்பட்ட, அவரது பள்ளி ஆசிரியர்கள், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, உறவினர்களின் துணையுடன் சிகிச்சைக்கு சென்றபோது, சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். அதனால், அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, சமூக நலத்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர், இதுதொடர்பாக கடந்த 25.2.2021 அன்று சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின்பேரில், ஆரணி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், சிறுமியின் தந்தை கன்னியப்பனை போக்சோ கட்டத்தின் கீழ் கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, பெற்ற மகளிடமே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, கர்ப்பமாக்கிய கன்னியப்பனுக்கு சாகும் வரை (வாழ்நாள் முழுவதும்) சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் ₹5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கன்னியப்பனை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்