போக்குவரத்து துறையில் அசத்திய மதுரை கோட்டத்திற்கு 6 சிறப்பு விருதுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு

 

மதுரை, மார்ச் 12: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்திற்கு ஒன்றிய அரசின் 6 விருதுகள் கிடைத்துள்ளதாக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் எரிபொருள் திறன், சாலை பாதுகாப்பு, டயர் செயல்திறன், வாகன பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஒன்றிய அரசின் 6 சிறந்த விருதுகளை பெற மதுரை கோட்டம் தேர்வாகியுள்ளது.

ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து – நெடுஞ்சாலை துறையின் அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த கூட்டமைப்பு ஆண்டு தோறும் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன. தற்போது தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல் படியும், போக்குவரத்துத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும் போக்குவரத்து கழகம் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது.

அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2022-23ம் ஆண்டுக்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளன. இதில் மதுரை கோட்டம் மட்டும் 6 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்