ஊட்டி,ஜூலை7: தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கோத்தகிரி அருகே கட்டப்பெட்டு வனசரகத்திற்கு உட்பட்ட ஒன்னதலை வனப்பகுதியில் 11 ஹெக்டேர் பரப்பளவில் அந்நிய மரங்கள் மற்றும் தாவரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக, அங்கு சோலை மர நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நேற்று முன்தினம் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். பின்னர் இங்கிலாந்து அரசின் பசுமை நிழற்குடை விருது பெற்ற லாங்வுட் சோலைக்கு சென்றார். அங்கு ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும் சூழல் மையம், சோலை மர நாற்றுகள் தயாரிக்கும் நர்சரி, சூழல் சுற்றுலா அழைத்து செல்ல வாங்கப்பட்டுள்ள பேட்டரி வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று பார்வையிட்டார்.