தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி

பல்லாவரம், ஏப்.28: குன்றத்தூர் அருகே தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் தவறி விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (20). இவர், குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிட்கோவில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரவீன்குமார் வழக்கம்போல் பணிக்கு சென்றார். அப்போது, 55 டிகிரி கொதிநிலையில் இருந்த சோடியம் ஹைட்ராக்சைடு கெமிக்கல் நிரப்பப்பட்ட தொட்டியில் உள்ள நீரில் சுற்றிக்கொண்டிருந்த மெஷின் திடீரென பழுதானது.

இதனையடுத்து, பிரவீன்குமார் கெமிக்கல் தொட்டியின் மேலே ஏறி, மெஷினை சரிசெய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கெமிக்கல் தொட்டியில் தவறி விழுந்தார். இதில், உடல் வெந்து, வலியால் அலறி துடித்தார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், பிரவீன்குமாரை கெமிக்கல் தொட்டியில் இருந்து மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற குன்றத்தூர் போலீசார், பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கம்பெனி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்

காரியாபட்டி அருகே தனியார் சோலார் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு

சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு