பாடாலூர், டிச. 28: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலையடிவாரம் பகுதியில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் 3ம் ஆண்டு ஐயப்ப சுவாமி வீதி உலா நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் மலையடிவாரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் விநாயகர், முருகன், ஐயப்பன், மஞ்சமாதா, கருப்புசாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
அதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்பன் சுவாமி வீதியுலா கோயில் முன்பு தொடங்கி செட்டிகுளம் கடைவீதி, தெற்கு தெரு, வடக்குத் தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்காய், வாழைப்பழம் போன்ற பொருட்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செட்டிகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.