கோடியக்கரை அருகே அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

 

வேதாரண்யம், நவ. 5: மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த மதன் (20), சிவகுமார் (50), நித்தியானந்தம் (16), ஆகியோரும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கிராமத்தில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி அதிகாலை கோடியக்கரை கடற்கரையில் இருந்து தென் கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகில் 3 கடற்கொள்ளையர்கள் வந்தனர்.

அவர்களில் 2 பேர் கையில் கட்டையுடன், புதுப்பேட்டை மீனவர்களின் படகில் ஏறினர். மீனவர்களை கட்டையால் தாக்கிவிட்டு படகில் இருந்த பேட்டரி, ஜிபிஎஸ் கருவி, 10 கிலோ எடையுள்ள மீன்கள், 2 டார்ச் லைட் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். பின்னர் கோடியக்கரை கடற்கரைக்கு வந்த மீனவர்கள் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் சிவகுமாரும், நித்தியானந்தமும் வேதாரண்யம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற இருவரும் நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து கடலோர காவல்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை