மதுரை, ஏப். 26: கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால், பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலான காலகட்டத்தில் பொதுமக்கள் வெளிநடமாட்டத்தை குறைக்கத் துவங்கியுள்ளனர். பலரும் வீடுகளிலும், அலுவலகங்களிலும் முடங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலான வீதிகள் மற்றும் சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்களின் வருகையும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.