ஏரல்: தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் 52 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வு பணிகள், கடந்த பிப்.26ம் தேதி தொடங்கி 6 மாதமாக நடந்து வருகிறது. கொற்கை பாண்டிய மன்னனின் தலைநகராகவும், துறைமுகமாகவும் இருந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வாணிபத் தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான பொருட்கள், கடந்த ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு இயக்குநர் தங்கதுரை, தொல்லியல் அலுவலர் ஆசைதம்பி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அகழாய்வில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்பு, செங்கல் கட்டுமான அமைப்பு என 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மாறமங்கலம் ஆய்வில் செப்பு, அலுமினிய நாணயம் என 2 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளது. கால்டுவெல் ஆய்வின்போது அதிகமான நாணயங்கள் கிடைத்த இடம் என கொற்கை போற்றப்பட்டது. ஏற்கனவே கொற்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் செங்கல் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் 3 அடி உயரமுள்ள கொள்கலன் கிடைத்துள்ளது. இது 2000 ஆண்டுக்கு முன் உணவு தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதை திறந்த பிறகே உள்ளே என்ன தானியங்கள் இருக்கும் என்பது தெரிய வரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள ஆய்வில் பல தகவல்கள், பொருட்கள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொற்கை அகழாய்வில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்….