கோமா: காங்கோவில் எரிமலை சீற்றத்தால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் குழந்தைகளுக்கு நடனம் மூலமாக உற்சாகம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்ரிக்காவின் மிக அபாயகரமான நிராகாங்கோ எரிமலை அண்மையில் வெடித்து நெருப்பை கக்கியதில் 30 பேர் பலியாகினர். வீடுகளை இழந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் கோமாநகர முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்த 3 முதல் 10 வரை வரையிலான குழந்தைகளுக்கு இணுகா நடன பயிற்சி சார்பில் நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு செல்ல முடியாத சூழலில் மன அழுத்தம், கவலை உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து குழந்தைகள் மீண்டு வரவும், சக மனிதர்களோடு பழகும் பண்பை வளர்க்கவும் நடன பயிற்சி உதவுவதாக நடன பள்ளி நிறுவனரும், பயிற்சியாளருமான ஃபெர்லீன் கசோலின் தெரிவித்தார். வெற்றிடத்தில் ஒரு சிறிய மேடை போல அமைத்து அங்கு குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கப்படுகிறது. துள்ளி ஆட வைக்கும் பாடல்கள், புதுப்புது நடன அசைவுகள் என குழந்தைகள் கவலைகளை மறந்து உற்சாகத்தில் திளைத்துள்ளனர். …