ஆலங்குடி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பு பலாப்பழங்கள் விலை வீழ்ச்சி: ரூ.10, 20க்கு கூவி கூவி விற்பனை

ஆலங்குடி: ஆலங்குடி பகுதியில் அதிக விளைச்சல் காரணமாக பலாப்பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பனங்குளம், குளமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும்  அதிக அளவில் பலாப்பழங்கள் உற்பத்தி நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையும் பலாப்பலம் மிகுந்த ருசியுடன் இருப்பதால் தனி மவுசு உள்ளது. பலாப்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் சவுதி அரேபியா, துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனாவால் பலாப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் மரங்களியே பழுத்து அழுகி வீணானது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த ஆண்டுதான் ஓரளவு பலாப்பழங்களின் விற்பனை நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் பலாப்பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய அளவிலான பலாப்பழங்கள் ரூ.10க்கும் ரூ.20க்கும், சுமார் ரூ.1,000 வரை விலை போன பெரிய அளவிலான பழங்கள்  ரூ.150 மற்றும் ரூ.200க்கு மட்டுமே விற்பனை ஆகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் மதிப்பு கூட்டும் முறையில் இப்பகுதிகளில் விளைந்த பலாப்பழங்களை விற்பனை செய்ய தமிழக அரசு உதவ வேண்டும் என்று பலா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் தொலைநோக்கு பார்வையால் வணிகவரி துறையில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய்: தமிழக அரசு தகவல்

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு