அரியலூர்,செப்.30: அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி, வாலாஜாநகரம் கிராம நிர்வாக அலுவலர்களை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பணியிட மாற்றம் செய்துவிட்டு அந்த பணியிடத்துக்கு வேறு பகுதியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை அரியலூர் கோட்டாச்சியர் நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 26ம் தேதி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மேற்கண்ட 4 கிராம நிர்வாக அலுவலர்களின் இடம் மாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்டத்திலுள்ள 170 கிராம நிர்வாக அலுவலர்களும் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகங்கள் பூட்டிக்கிடந்தன.