அன்னூர், மே 31: அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக இருசக்கர வாகனத்தில் சாலையில் பயணிப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். கன மழை காரணமாக, அன்னூர் எல்லப்பாளையம் பிரிவு பகுதியில் கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த நூறாண்டுகள் பழமையான ராட்சத புளிய மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் சாய்ந்தது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். மழை காரணமாக அன்னூர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.