லுசாக்கா: ஜாம்பியாவில் துபாய் சென்ற விமானத்தில் 17 கோடி ரூபாய், பல கோடி மதிப்புள்ள தங்கத்தை கடந்த முயன்ற இந்தியரை அதிகாரிகள் குழுவினர் கைது செய்தனர். ஜாம்பியா நாட்டின் முக்கிய விமான நிலையமான கென்னத் கவுண்டா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக 27 வயதுடைய இந்தியர் ஒருவர் தனது பேக்குகளுடன் நின்று கொண்டிருந்தார்.
அவரை ஜாம்பியா நாட்டின் அமலாக்கத் துறை ஆணைய அதிகாரிகள் குழு பரிசோதித்தனர். அப்போது அவரிடம் 2 மில்லியன் டாலர்கள் (ரூ.17,07,74,505) பணமாகவும், 500,000 டாலர் மதிப்புள்ள தங்கமாகவும் இருந்தது. வெளிநாட்டிற்கு பணமும், தங்கமும் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. ஜாம்பிய நாட்டின் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ரப்பர் பேண்டுகளால் கட்டப்பட்ட 100 டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பணம் ஒரு கருப்பு பையில் வைக்கப்பட்டு, பின்னர் ஒரு பெரிய பாலிப்ரோப்பிலீன் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அதிகாரிகள் கூறினர். தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் செம்பு மற்றும் தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், உலக வங்கியின் கூற்றுப்படி, அந்நாட்டு மக்களில் 60 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கின்றனர். கடந்த 2023ம் ஆண்டில், ஜாம்பியாவில் ஐந்து எகிப்தியர்கள் ஆயுதங்கள், 127 கிலோகிராம் (280 பவுண்டுகள்) தங்கம் மற்றும் 5.7 மில்லியன் டாலர் பணத்துடன் விமானத்தில் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.