பெங்களூரு: பெங்களூரு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், இளம்பெண் 17 முறை சரமாரியாக கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், கள்ளக்காதலனை கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்தவர் தாசே கவுடா. இவரது மனைவி ஹரிணி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஹரிணி வசிக்கும் பகுதியில் கண்காட்சி நடந்தது. அங்கு சென்ற அவருக்கு, கண்காட்சியில் டெக்னீஷியனாக இருந்த யஷாஸ் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது இருவரும், தங்களது செல்போன் எண்ணை பரிமாறி கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு நட்பு உருவாகி, கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. டேட்டிங் செய்து, சுற்றித் திரிந்ததுடன், சில சமயங்களில், இருவரும்தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரம தெரிந்ததும், தாசே கவுடா ஹரிணியின் செல்போனை பறித்து கொண்டு, வீட்டிலேயே அடைத்து வைத்தார்.இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு பிறகு, ஹரிணி, மீண்டும் வெளியே வந்தார், அப்போது, தனது கள்ளக்காதலன் யஷாஸை தொடர்பு கொண்டு பேசினார். கடந்த 6ம் தேதி, இருவரும், சந்தித்தனர். பின்னர், பெங்களூரு பூர்ணா பிரக்யா லேஅவுட்டில் உள்ள ராயல்ஸ் ஓட்டலில் அறை முன்பதிவு செய்த யஷாஸ், அங்கு அவரை அழைத்து சென்றார். அப்போது அவர்கள், உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யஷாஸ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஹரிணியை சரமாரியாக 17 முறை குத்திக் கொன்றார்.
பின்னர், அங்கிருந்து தப்பிவிட்டார். அறையில் தங்கியவர்கள் நீண்ட நேரமாக வெளியே வராததால், ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சுப்பிரமணியபுரா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, ஹரிணி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார யுஷாசை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஹரிணி தன்னை தவிர்த்து வந்ததால், அவரை கொலை செய்ததாக யஷாஸ் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.