கோபால்கஞ்ச்: முகத்தில் ஆசிட் ஊற்றிய காயங்களுடன் சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம் வீசப்பட்ட நிலையில், அந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தின் போரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் பத்து நாட்களுக்கு முன்பு, ஷில்பி யாதவ் என்ற இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியிருந்தது. போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது அதே பகுதியில் மற்றொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது மக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. லக்ராவ் பாக் பகுதியில் உள்ள மயானத்திற்கு அருகே, சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், இளஞ்சிவப்பு நிற சல்வார் சூட் அணிந்திருந்தார். அவரது முகத்திலும் உடலிலும் பலத்த காயங்கள் இருந்ததுடன், அடையாளத்தை மறைக்கும் கொடூரமான நோக்கில் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இறந்தவர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து, காணாமல் போனவர்களின் பட்டியலைச் சரிபார்த்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் மோகன் குப்தா தெரிவித்துள்ளார்.