திருமலை : போலீஸ் அதிகாரியின் மகள் எனக்கூறி காதல் வலை வீசி வாலிபர்களிடம் நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா அடுத்த லாவுடிதாண்டாவை சேர்ந்தவர் பிரத்யுஷா (28).
இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்போன்களை லாவகமாக திருடி அதனை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளார். மேலும் தன்னை ஏஎஸ்பியின் மகள் என்றும், ஐதராபாத் நிம்ஸ் அரசு மருத்துவமனையில், ரேடியோலிஜிஸ்ட் நிபுணராக உள்ளதாகவும், ஐ.ஏ.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று கலெக்டருக்கு தேர்வாகி உள்ளதாகவும் விரைவில் கலெக்டராகி விடுவேன் என்றும் கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
குறிப்பாக வசதிபடைத்த இளைஞர்களை காதல் வலை வீசி அவர்களிடம் இருந்து செல்போன், நகை, பணம் ஆகியவற்றை பறித்து வந்தார். அவர்களை ஏமாற்றியவுடன் தனது செல்போன் எண்ணை மாற்றிவிட்டு மீண்டும் வேறு வாலிபரை ஏமாற்றுவதை தொடர்ந்துள்ளார்.இதேபோல் சில வாரங்களுக்கு முன் நர்கட்பள்ளி பகுதியில் வசிக்கும் டாக்டர் ஒருவருக்கு காதல்வலை வீசி அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் நல்கொண்டா போலீசார், நேற்று முன்தினம் பிரத்யுஷாவிடம் விசாரித்தனர். விசாரணையில் பல போலீஸ் நிலையங்களில் பிரத்யுஷா மீது மோசடி, திருட்டு வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரத்யுஷாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.