ஏலகிரி: ஏலகிரி மலை மேட்டுக்கணியூர் கிராமத்தில் கிணறு கட்டடம் சரிந்து விழுந்தது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில், அத்தனாவூர், நிலாவூர், மங்கலம் மேட்டுக்கனியூர் உள்ளிட்ட 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதிக்காக அரசு பொதுகிணறுகள் உள்ளது.இந்நிலையில் மேட்டுக்கணியூர் கிராமத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்டு, கிராம மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்த கிணற்றின் கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது. கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் கோடைகாலம் வர உள்ள நிலையில் கிணறு சரிந்துள்ளதால் தண்ணீர் பிரச்னை ஏற்படும் எனவும், இதனால் இடிந்து விழுந்த கிணற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.