ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறையை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. தற்போது, நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே வரலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கல்லாறு, குஞ்சப்பனை, கெத்தை, மசினகுடி, மேல் கூடலூர் ஆகிய 5 சோதனை சாவடிகள் மட்டுமே இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த 5 சோதனை சாவடிகளில் கல்லாறு தவிர மற்ற அனைத்தும் மாவட்டத்திற்குள் வந்து விடுகிறது.
இதனால், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதி தூரம் வந்த பின்னர், இ-பாஸ் கிடைக்கவில்லை என்றால் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது ஒரு புறம் இருக்க கெத்தை சோதனை சாவடி அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலான செல்போன்களின் நெட்வொர்க் கிடைப்பதில்லை. இதனால், அங்கு வந்து இ-பாஸ் போடுவதற்கு முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மசினகுடியிலும் நெட்வொர்க் பிரச்னை உள்ளது. எனவே, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலேயே இ-பாஸ் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். அனைத்து செல்போன் நெட்வொர்க் உள்ள இடங்களில் மட்டும் சோதனை சாவடிகளை அமைக்க முன் வர வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.