மதுரை: மதுரை உலக சாதனையை நோக்கி தூய்மை பணியாளர்களை கொண்டு மாபெரும் மனித வடிவில் “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்” உருவமாக்கும் நிகழ்வு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் மதுரை மாநகராட்சி மண்டலம் 2 ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா, ஆணையாளர் கே.ஜே.பிரவிண்குமார், இஆய, அவர்கள் ஆகியேரர் முன்னிலையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு மாபெரும் மனித வடிவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவமாக்கும் நிகழ்ச்சி இன்று (10.06.2023)நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை வருடம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி கலைஞர் நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக உலக சாதனையை நோக்கி மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 2752 தூய்மை பணியாளர்களை கொண்டு மாபெரும் மனித வடிவில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவப்படத்தை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். முன்னதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தலைமையில் தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் தூய்மைக்கான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மாபெரும் மனித வடிவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவமாக்கும் நிகழ்விற்காக டிரையும்ப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனைக்கான விருதினை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் அவர்களிடம் வழங்கினார்கள்.