வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை நீரில் தவறி விழுந்த செருப்பு தைக்கும் தொழிலாளி பலி: ரயில்வே போலீசார் விசாரணை
பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை தண்ணீரில் தவறி விழுந்த செருப்பு தைக்கும் தொழிலாளி பலியானார். வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய நடைமேடையில் இருந்து பயணச்சீட்டு பெறும் இடத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், அந்த சுரங்கப்பாதை நீரில் மிதப்பதாக பெரம்பூர் இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மரியரோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்த நபர் பெரம்பூர் மேட்டுப்பாளையம் பெரியபாளையத்தம்மன் கோயில் லைன் பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பதும், இவருக்கு திருமணமாகி கலாவதி என்ற மனைவியும், உமாசங்கர் என்ற மகனும், மாலினி என்ற மகளும் இருப்பது தெரிய வந்தது. இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாசர்பாடி ஜீவா பகுதியில் டிக்கெட் வாங்க வரும்போது கால் தவறி சுரங்கப்பாதையில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறது. முருகனின் பிரேத பரிசோதனை முடிவில் தான் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரும் என பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் தெரிவித்தனர்.


