வேலூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது இன்று (25.6.2025) வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.6.2025) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சரிடம் பொற்செல்வி வழங்கிய கோரிக்கை மனுவில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அனைவரையும், தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்து தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரி இன்று காலை விண்ணப்பம் மனு அளித்தார்.
பொற்செல்வியின் ஏழ்மை நிலையை பரிவோடு கருதி, அவரது மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பொற்செல்விக்கு ரூபாய் 17,000 மாத சம்பளத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.
முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், பண நியமன ஆணை கிடைத்ததால், அதனை பெற்றுக் கொண்ட பொற்செல்வி அளவில்லாத மகிழ்ச்சியோடு, முதலமைச்சரை வணங்கி நன்றி தெரிவித்தார்.