கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே 5,000 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஆதமங்களம், மேலூர், சத்தநத்தம், தொளார் உள்ளிட்ட கிராமங்களில் 4 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் பயிர் செய்த நெல்லை அறுவடை செய்து இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இப்பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் மழை விட்டுவிட்டு பெய்வதால் 25,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. அதேபோல் கொள்முதல் செய்யப்பட்ட 4 கொள்முதல் நிலையங்களில் உள்ள 25,000 நெல் மூட்டைகள் லாரி பற்றாக்குறையால் குடோனுக்கு எடுத்து செல்லப்படாமல் ஆங்காங்கே திறந்தவெளியில் இருப்பதால் அந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது.
மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் விரைவாக விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.