சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் மழை வேண்டி கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மழை பெய்ய வேண்டிய முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒரே நிற உடை அணிந்து வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர். நாட்டுப்புற பாடல்கள் பாடியபடி பெண்கள் வரிசையாக நின்று வள்ளி கும்மி ஆட்டம் நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.
அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாகவும், மழை பெய்து பூமி செழிக்கவும் வேண்டி வள்ளி கும்மி ஆட்டம் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீ செல்வ விநாயகர் வள்ளி கும்மி ஆட்ட குழுவினர் தெரிவித்தனர்.