திருமலை: ஆந்திராவில் பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் சந்திரபாபுநாயுடு தெரிவித்திருந்தார். இதற்கு சக்தி என்ற பெயரில் வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாட்ஸ்அப் எண் அறிமுக விழா நேற்று குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ள மாநில டிஜிபி அலுவலகத்தில் நடந்தது. இதில் டிஜிபி ஹரிஷ்குமார்குப்தா கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்புக்கான சக்தி வாட்ஸ்அப் எண் 79934 85111 என்ற எண்ணை அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர் பேசுகையில், பாதுகாப்பின்றி இக்கட்டான சூழலில் சிக்கும் பெண்கள் உடனடியாக இந்த எண்ணுக்கு போன் செய்தாலோ அல்லது வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினாலோ போதும். உடனடியாக அவர் எந்த இடத்தில் இருந்து மெசேஜ் அனுப்பினார் என்ற தகவலை கட்டுப்பாட்டு அறையில் பெற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள். இதன்மூலம் அந்த பெண்ணுக்கு சரியான பாதுகாப்பு அளித்து பத்திரமாக மீட்கப்படுவார்கள். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும். இதற்கான கட்டுப்பாட்டு அறையில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.