Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அனாதை என்று கூறி 4 பெண்களை ஏமாற்றி திருமணம்: கல்யாண மன்னன் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் அனாதை என்று கூறி இளம்பெண்களின் மனதை உருக வைத்து 4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தீபு பிலிப் (36). பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது தான் அவரது பொழுதுபோக்காக இருந்துள்ளது. தன்னுடைய மனதிற்கு பிடித்த பெண்ணைப் பார்த்தால் உடனே அவரிடம் சென்று, தான் ஒரு அனாதை என்றும், இந்தக் காரணத்தால் யாரும் தனக்கு பெண் தராததால் நீண்ட காலமாக தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுவார்.

தீபு பிலிப்பின் சோகக்கதையை கேட்டு மனமிரங்கும் இளம்பெண்களை உடனடியாக அவரது வலையில் வீழ்த்தி விடுவர். இப்படித்தான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காசர்கோட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை முதன் முதலாக திருமணம் செய்தார். 3 வருடங்களுக்கு மேல் தீபு பிலிப் அவருடன் வாழ்ந்து வந்தார். இதில் 2 குழந்தைகளும் பிறந்தன. அதன் பிறகு பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை பறித்துவிட்டு நைசாக நழுவினார். பின்னர் தீபு பிலிப் 2வது பெண்ணுக்கு வலை விரித்தார். காசர்கோட்டிலேயே மீண்டும் ஒரு திருமணத்தை செய்தவர், அந்த பெண்ணுடன் தமிழ்நாட்டுக்கு சென்று ஒரு சில வருடங்கள் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரையும் விட்டுவிட்டு எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 3வதாக திருமணம் செய்தார்.

இவருடன் இருந்தபோது தான் ஆலப்புழாவை சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவரையும் தன்னுடைய வலையில் வீழ்த்திய தீபு பிலிப், 4வதாக திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண் மூலம் தான் தனக்கு சிக்கல் ஏற்படப்போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. தீபு பிலிப்பின் 2வது மனைவியும், ஆலப்புழாவை சேர்ந்த 4வது மனைவியும் பேஸ்புக் தோழிகள் ஆனார்கள். அப்போது தான் 2 பேருக்கும் ஒரே கணவன் தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 4வது மனைவி கோன்னி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாண மன்னன் தீபு பிலிப்பை கைது செய்தனர். இனி அனாதையாக வெளியே இருக்க வேண்டாம். சிறையில் துணைக்கு பலர் இருப்பார்கள் என்று கூறி அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.