பெங்களூரு: 5 அணிகள் பங்கேற்றுள்ள 3வது சீசன் மகளிர் ஐபிஎல் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன் எடுத்தது. பாரதி புல்மாலி நாட்அவுட்டாக 40, டியான்ட்ரா டாட்டின் 26 ரன் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியில் ஷபாலி வர்மா 27 பந்தில், 44, ஜெஸ் ஜோனாசென் நாட்அவுட்டாக 32 பந்தில் 61ரன் விளாசினர். 15.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 131ரன் எடுத்த டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெஸ் ஜோனாசென் ஆட்டநாயகி விருது பெற்றார். 5வது போட்டியில் 3வது வெற்றியுடன் டெல்லி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. குஜராத் 4வது போட்டியில் 3வது தோல்வியை சந்தித்தது. இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ்-உ.பி.வாரியர்ஸ் மோதுகின்றன.