சென்னை: மகளிர் விடியல் பயண திட்டத்தில் இதுவரை 700.38 கோடி முறை பெண்கள் பயணித்துள்ளனர் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: மகளிர் விடியல் பயணம் மூலம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி முதல் கடந்த 29ம் தேதி வரை 700.38 கோடி முறை பேருந்துகளில் பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஜூலை 2021ம் ஆண்டு நாளொன்றுக்கு 34.55 லட்சம் மகளிர் பயணம் செய்த நிலையில் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது தினமும் சராசரியாக 65.17 லட்சம் பெண்கள் மகளிர் விடியல் பயண பேருந்துகளில் பயணித்து வருகிறார்கள். அதிகபட்சமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 139.67 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டு உள்ளனர். அடுத்தபடியாக கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 128.21 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
கோவை போக்குவரத்து கழகத்தில் 103.26 கோடி முறையும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 92.47 கோடி பயண நடைகளும், சேலம் போக்குவரத்து கழகத்தில் 84.45 கோடி நடைகளும், மதுரை போக்குவரத்து கழகத்தில் 83.02 கோடி நடைகளும், திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் – 69.30 கோடி முறை என மொத்தமாக 700.38 கோடி முறை பேருந்துகளில் பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 7,671 மகளிர் விடியல் பயண பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் அதிகபட்சமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 1,711 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அடுத்தபடியாக கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 1,277 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 1047, சேலம் போக்குவரத்து கழகத்தில் 854, கோவை போக்குவரத்து கழகத்தில் 1,130, மதுரை போக்குவரத்து கழகத்தில் 938, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் 714 என ஒட்டுமொத்தமாக 7,671 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.