சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டிற்கான திடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஏய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை வருகிறார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகிறார்.
சென்னை வரும் சோனியா காந்தியை விமான நிலையம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளார். இந்த மாநாட்டில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணியின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் ஒன்றிய அரசு அண்மையில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் மகளிர் உரிமை மாநாட்டை நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.