புதுடெல்லி: விந்தணு மற்றும் முட்டை இல்லாமல் மனித கருவின் மாதிரியை இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இஸ்ரேலில் உள்ள வெயிஸ்மேன் அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் விந்தணு மற்றும் முட்டை இல்லாமல் செயற்கை மனித கருவை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில் ஸ்டெம் செல்கள் மூலம் மனித கருவை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இதுதொடர்பாக நேச்சர் என்ற இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், செயற்கை கரு மனித கருவை போன்றே உள்ளது. இது, நஞ்சுக்கொடி, திசுப்பை மற்றும் பனிக்குட பை போன்ற வெளிப்புற கட்டமைப்புகளை கொண்டுள்ளன. ஆராய்ச்சி கூடத்தில் 14 நாட்களில் செயற்கை கரு உருவாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சி குழுவின் தலைவர் பேராசிரியர் ஜேக்கப் ஹன்னா கூறுகையில்,‘‘ ஆரம்ப கட்ட மனித உடல் உறுப்புகள் வளர்ச்சிக்கான அடித்தளமாகும் இது. ஒன்றும் இல்லாமல் மனித கருவை உருவாக்கும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளோம். இனி இதில்,50 சதவீத வெற்றி காண முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும்,கருத்தரிப்பில் மருந்துகளின் பயன்பாடு மற்றும் கருச்சிதைவு ஏற்படுவது போன்றவற்றில் இந்த ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கும்’’ என்றார்.