லண்டன்: விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா அபார வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமண்டா விக்டோரியா அனிசிமோவா, ஹங்கேரி வீராங்கனை டால்மா கால்ஃபி மோதினர்.
இருவரும் சளைக்காமல் மோதியதால் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக வசப்படுத்தினர். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை அமண்டா கைப்பற்றினார். அதனால், 6-3, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் அவர் அபார வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியா செர்கெயெவ்னா பாவ்லியுசென்கோவா, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா மோதினர். இப்போட்டியில் அனஸ்டாசியா, 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.