கோவை: கோவை அருகே வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம்.
இதனிடையே கடந்த சில நாட்களாக கோவை நரசீபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நரசீபுரம் பகுதிக்குள் ஒற்றை ஆண் காட்டு யானை நேற்றிரவு நுழைந்துள்ளது. அப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்த யானை, இச்சிக்குழி அருகில் உள்ள நாகர்கோவில் தோட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கு விவசாயம் செய்து வரும் கார்த்திக் என்பவரின் வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது. இதில் வீட்டின் முன் பக்க சுவரின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் மற்றும் வீட்டின் முன்பு இருந்த பொருட்களையும் அந்த யானை சேதப்படுத்தியுள்ளது.
இதைப்பார்த்த அச்சம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர், காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ச்சியாக காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருவதாகவும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.