Tuesday, June 17, 2025
Home செய்திகள் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு

காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு

by Lakshmipathi

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு மாடுகளின் இனப்பெருக்கம் காரணமாக அவற்றின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக மெரிலேன்ட்,மைனலாமட்டம்,தேனோடு,கிட்டட்டிமட்டம், பெங்கால்மட்டம் கோத்திபென்,சாம்ராஜ் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு மாடுகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.

பகல் நேரங்களில் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு மேய்ச்சலில் ஈடுபடுவதால் தோட்டங்களுக்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடன் பணிக்கு சென்று வர வேண்டி உள்ளது.

பல சமயங்களில் தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் காட்டு மாடுகள் தொழிலாளர்களை கண்டு அவர்களை விரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.பெங்கால்மட்டம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு வரை மலை காய்கறி விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

காட்டு மாடுகள் விளை நிலங்களில் புகுந்து காய்கறி பயிர்களை சேதம் செய்வது அதிகரித்ததால் படி, படியாக விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிடுவதை அறவே தவிர்த்தனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மஞ்சூர் மின்வாரிய மேல்முகாம் பகுதியில் பள்ளிவாசல் முன்பு குட்டிகளுடன் பத்துக்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் நீண்ட நேரம் முகாமிட்டிருந்தது.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் முகாமிட்ட காட்டு மாடுகள் பின்னர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்ற பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை மஞ்சூர் பஜாரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுதியாக இருந்தது. அப்போது கீழ்குந்தா சாலையில் இருந்து ராட்சத காட்டு மாடு ஒன்று கம்பீரமாக சாலையில் நடந்து சென்றது.

அப்போது ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் எதிரே காட்டு மாடு வருவதை கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவ்வழியாக வந்த வாகனங்களும் காட்டுமாடு வருவதை கண்டு ஒதுக்கி நிறுத்தப்பட்டது. இதனால் மஞ்சூர் கடைவீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் வாகன போக்குவரத்து எதையும் பொருட்படுத்தாமல் ஹாயாக சாலையில் நடந்து சென்ற காட்டு மாடு அல்லாட பகுதிக்கு புகுந்தது.தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்குள்ள புல்வெளியில் மேய்ச்சலில் ஈடப்பட்ட பின் வனப்பகுதிக்குள் சென்றது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi