Friday, April 26, 2024
Home » தேனிக்காரரை நம்பியதால் பாத்திர வியாபாரியாக மாறிய மாவட்ட செயலாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

தேனிக்காரரை நம்பியதால் பாத்திர வியாபாரியாக மாறிய மாவட்ட செயலாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Arun Kumar

‘‘புல்லட்சாமிக்கு குடைச்சல் தரும் நபரின் தைரியத்தை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்று ஆவலுடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் உருளைகிழங்கு பெயரை கொண்ட தொகுதியில் சுயேட்சையாக வெற்றி பெற்றவர், காங்கிரஸ் மூத்த தலைவரின் பெயரை கொண்டவர். புல்லட்சாமியை அரசியல் ரீதியாக ஆதரித்து வருகிறாராம். அவருக்கு ரோஷம் வந்தால் பக்கத்துல யாருமே நிற்க மாட்டாங்களாம். சில சமயம் கோபத்துல என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்துவிடுவது இவரின் ஸ்பெஷாலிட்டி. அவரது இந்த நடவடிக்கை ஆளும் கட்சிக்கு சில நேரங்களில் தலைவலியா மாறிவிடுகிறதாம். தனது தொகுதியில் குப்பை வாரவில்லையென்றால் அதிகாரியிடம் பேசி சரி செய்யலாம். ஆனால் இவரு ரொம்பவே வித்தியாசமானவராம். அள்ளாத குப்பையை எடுத்து தானே ஏற்பாடு செய்த வாகனத்தில் ஏற்றி கொண்டுபோய், பணியில் கவனம் செலுத்த நகராட்சி அலுவலக வாசலில் கொட்டுவாராம். இதேபோன்று தற்போது வீதியில் இறங்கி அநியாயங்களை தட்டிக்கேட்கும் அவரது செயல்பாடுகளால் புல்லட்சாமி தர்மசங்கடத்துல இருக்காராம்.

கடந்த சில தினங்களுக்கு முன் முக்கிய சந்திப்பில் இருந்த போக்குவரத்து காவலரிடம் சென்று, ஹெல்மெட் அணியாமல் வந்தால் எதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் போடுறீங்க. உங்களுக்கு குழந்தை, குட்டி இல்லையா.. அதோடு உங்களுக்கு எவ்வளவு சம்பளம், இவருக்கு என்ன சம்பளம் தெரியுமா எனக்கேட்டு வறுத்தெடுத்தாராம். அடுத்த நாளே, கலால் துறைக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்த தாசில்தாரை அழைத்து, உங்களுக்கு என்ன வேலை கொடுத்திருக்காங்க. மெத்தனால் விற்பவர்களை உங்களுக்கு தெரியாதா.. ஒரு வேலையும் செய்வதில்லை. உங்களால் பக்கத்து மாநிலத்தில் நம்ம மாநிலத்தின் மானம் போகுது என்று ‘அன்பார்லிமென்ட்’ வார்த்தையில் ஏசினாராம். அதோடு இல்லாமல், புல்லட்சாமி வைத்திருக்கும் கலால்துறை செயல்பாடுகளை கண்டித்து போராட்டம் அறிவித்திருக்கிறாராம். உண்மையிலே இந்த ஆட்சியை ஆதரிக்கிறாரா என்று தெரியாமல் புல்லட்சாமியை செம குழப்பத்தில் ஆழ்த்தி இருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ தேனிக்காரர் கண்டு கொள்ளாததால் பாத்திர வியாபாரத்துக்கு சென்றுவிட்டாராமே மாவட்ட செயலாளர்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைகட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணியாக செயல்பட்டு வர்றாங்க. டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் மாவட்ட செயலாளராக முதல் எழுத்தில் ஆரம்பிக்க கூடிய ஆயில் என்ற பெயரானவர் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சேலம்காரர் அணியில் இருந்து பிரிந்து தேனிக்காரர் அணிக்கு தாவிய இவர், சேலம்காரருக்கு எதிராக சிட்டி முழுவதும் போஸ்டர்களை ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இலை கட்சியில் சேலம்காரர் கை ஓங்கியிருப்பதால் தேனிக்காரர் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வந்தார். இதனால் தற்போது மாவட்ட செயலாளரை தேனிக்காரர் கண்டுகொள்ளாததால் உச்சகட்ட விரக்தியில் இருக்கிறாராம். சேலம்காரர் அணியிலே இருந்திருந்தால் செல்வாக்குடன் இருந்திருக்கலாம். தேனிக்காரரை நம்பி வந்தால் அவரும் கண்டு கொள்ளவில்லை. தேனிக்காரர் அணியில் உள்ள நிர்வாகிகளும் மதிக்க மாட்டேங்குகிறாங்க. கட்சி சம்பந்தமாக வெளியில் சென்றால் கூட தன்னந்தனியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என கப்சிப்பாக இருந்து வருகிறராம். அரசியலுக்கு தற்காலிகமாக முழுக்கு போட்டு விடலாம் என முடிவு செய்துள்ள மாவட்ட செயலாளர் தற்போது பாத்திர வியாபாரத்தில் முழுமூச்சில் இருக்கிறாராம். வியாபாரமும் லாபத்தில் ஓடுதாம்…’’ என்றார் விக்கியானந்தா

‘‘செங்கல் லாரியில் வரும்… இப்போது பார்சலில் வருதாமே…’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர், மிஸ்டர் பத்தூர், குயின்பேட்டை போன்ற மாவட்டங்கள்ல அதிகளவுல ஆன்லைன் ஆர்டர்கள்ல, செல்போனுக்கு பதிலாக செங்கல் தான் வருதாம். வெயிலூர் மாநகரத்துல காட்டுப்பாடியில மில்லி என்று ெதாடங்கி பிளாசான்னு முடியுற ஷாப்பிங் மால் பக்கத்துல இருக்குற ெதருவுல, போஸ்ட் ஆபிஸ் எதிர் வீட்டு மாடியிலத்தான் இந்த மோசடி கும்பல் தங்கியிருக்காங்க. இவங்க முதல்ல டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்து, படித்த பெண்களை வேலைக்கு எடுக்குறாங்களாம். அவங்க கிட்ட, பல ஆயிரம் பேரோட, செல்போன் எண்களை கொடுத்து, உங்க லக்கி நம்பர் எங்க ஸ்கீம்ல செலக்ட் ஆகியிருக்குது. உங்களுக்கு ஸ்மார்ட் செல்போன் ஆபர்ல வெறும் 4 ஆயிரத்துக்கு கொடுக்குறோம். நீங்க அதை மட்டும் கட்டணும்னு நைசா, பேசி பணத்தை வாங்கிடுறாங்களாம். அவங்களுக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல்லை பார்சல்ல அனுப்பி வைக்கிறாங்களாம். இப்படி இந்த கும்பல் கோவை, பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, காரைக்குடி, உத்திரமேரூர் என்று ஸ்டேட்ல பல ஆயிரம் பேரை ஏமாற்றி மோசடியில ஈடுபட்டு வர்றாங்களாம். ஆருத்ராவை போல, இது இன்னொரு டெக்னிக்கில ஜனங்ககிட்ட காசு புடுங்குற கும்பலா இருக்குதாம். வெளிஉலகத்துக்கு ேடட்டா எண்டரி நடத்துறோம்னு காட்டிக்குறாங்களாம். இவங்களோட இன்னொரு ஆபிசு குயின்பேட்டையில வாலானு தொடங்கி ஜா என்று முடியுற ஏரியாவுலயும் இருக்குதாம். இந்த மோசடி கும்பலை கையும் களவுமாக பிடிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு பாதிக்கப்பட்டவங்க பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கரண்ட்டால காக்கிகளுக்கு என்ன பிரச்னை…’’ என கேட்டார் பீட்டர் மாமா. குமரி கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள பழைய கருவூலக கட்டிடத்தில் ஆதார் மையம் இருக்கிறது. இலை ஆட்சியின் போது, இந்த கட்டிடத்துக்கு கரண்ட் பணம் கட்டாமல் விட்டாங்க. இப்போது லட்சத்தை தாண்டியதும், கடந்த மாதம், கரன்ட் கட் பண்ணிட்டாங்க. இதனால் ஆதார் மையத்தை, கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள வேறு கட்டிடத்துக்கு மாத்தினாங்க. இந்த கட்டிடம், கலெக்டர் ஆபீஸ் பாதுகாப்பு பணியில் இருக்கும், போலீஸ்காரங்க தங்கும் கட்டிடம் ஆகும். குறிப்பாக பெண் போலீஸ், இங்கு தங்கி தங்களது உடமைகளை வைத்து இருந்தார்கள். இப்போது இது ஆதார் மையமாக மாறிட்டதால, போலீஸ் தங்க இடமில்லை. பெண் போலீஸ் தங்களது உடமைகளை வெளியே தான் வைச்சிருக்காங்க. அவசரத்துக்கு உடை மாற்ற கூட முடியாத நிலை இருக்கு. கரண்ட் பணத்தை கட்டிட்டு ஆதார் மையத்தை எப்போது மீண்டும் பழைய கட்டிடத்துக்கே மாத்துவாங்க. நமக்கு கிடைக்க வேண்டிய அறை எப்போது கிடைக்கும் என்று பெண் போலீஸ் ஏக்கத்துடன் காத்திருக்காங்களாம்…’’ என்றார்
விக்கியானந்தா

You may also like

Leave a Comment

five + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi