Tuesday, March 25, 2025
Home » ‘மறைந்தாலும் மறக்க முடியவில்லை’: மனைவியின் நினைவிடத்துடன் அழகிய வீடு கட்டிய கணவர்.! நெமிலி அருகே நெகிழ்ச்சி

‘மறைந்தாலும் மறக்க முடியவில்லை’: மனைவியின் நினைவிடத்துடன் அழகிய வீடு கட்டிய கணவர்.! நெமிலி அருகே நெகிழ்ச்சி

by Mahaprabhu

நெமிலி: நெமிலி அருகே இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தின் மீது அவரது கணவர் நினைவிடம் கட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (52). இவர் காஞ்சிபுரத்தில் பில்டிங் கான்ட்ராக்டராக உள்ளார். இவரது மனைவி செல்வி (51). இவர்களது மகள் நிஷானி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவரது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்விக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு மார்ச் 5ம்தேதி இறந்தார். மனைவியை அதிகம் பழனி நேசித்த நிலையில் அவரது திடீர் மரணம் இவரை நிலைகுலைய செய்துள்ளது.

மேலும் மனைவி உயிருடன் இருந்தபோது தங்களுக்கென அழகான ஒரு வீடு கட்ட வேண்டும். அந்த வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அடிக்கடி பழனியிடம் செல்வி தெரிவித்து வந்தாராம். ஆனால் மனைவியின் ஆசையை அவர் உயிருடன் இருக்கும்போது நிறைவேற்ற முடியாததால் பழனி தவித்து வந்தார். இதற்கிடையில் இறந்த மனைவியின் உடலை துறையூரில் உள்ள தனது சொந்த நிலத்தில் அடக்கம் செய்தார். அங்கு நினைவிடத்துடன் கூடிய வீடு கட்டி அதனை மனைவியின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று திறக்கவேண்டும் என முடிவு செய்தார். அதன்படி நினைவிடத்துடன் கூடிய வீட்டை கட்டி அவரது மனைவியின் முதலாமாண்டு தினமான நேற்று முன்தினம் திறந்தார். அந்த வீட்டிற்கு `செல்வி துளசிவனம்’ என பெயரிட்டுள்ளார்.

வீடு முழுவதும் மனைவியின் புகைப்படங்களை சுவரில் அலங்கரித்துள்ளார். தனது மனைவியின் உடல் புதைத்த இடத்தின் அருகே சிறிய படுக்கை வசதியும் செய்துள்ளார். தனது மனைவி உயிருடன் இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் தன்னுடன் ஒவ்வொரு நொடியும் இருக்கும் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். அதேவீட்டில் பழனி தற்போது வசிக்க தொடங்கியுள்ளார். சிறிய கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் பெற்ற குழந்தைகளை விட்டு பிரிந்து நீதிமன்றங்களில் விவாகரத்து கேட்டு வரிசைகட்டி நிற்கும் சில தம்பதியர்களின் மத்தியில் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளதாக்கி மனைவி மறைந்தாலும் அவரது சுவடுகள் தன்னுள் எப்போது இருக்கவேண்டும் என கருதும் பழனியின் செயலை கண்டு பலர் வியந்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi