*அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கிரிக்கெட் பயிற்சி முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு பயிற்சி முகாம், தூத்துக்குடி தனியார் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அசோஷியேசன் தலைவர் துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். பயிற்சியாளர் அனிஸ் நடராஜ் முன்னிலை வகித்தார். டாக்டர் மகிழ்ஜான் வரவேற்றார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசுகையில்,நவீன தொழில்நுட்பத்துடன் வாகனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசாலும் வழங்கப்பட்டு வருகிறது.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரத்து 35 இடங்களுக்கு நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
நீங்கள் உங்கள் கோரிக்கைகளுக்காக பலவற்றை சந்தித்திருப்பீர்கள். தற்போது நீங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் உங்களை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். நீங்கள் உள்ளாட்சித் பதவிகளில் வரும் பொழுது உங்களுடைய குறைகள் என்ன என்று அதை நீங்கள் தெரிந்து கூறினீர்கள் என்றால் அது நீங்களாகவே நிறைவேற்ற முடியும், என்றார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் செல்வின், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, வட்டப் பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.