நன்றி குங்குமம் டாக்டர்
மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத்
இறுதி மாதவிடாய்ப் பருவத்தை அடைந்தபிறகு மாதவிடாய்த் தொல்லைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று அர்த்தம் இல்லை. சிலருக்கு இந்த நிம்மதி தொலைகிறது. ஆம், சுமாராகப் பத்தில் ஒரு பெண்மணிக்கு இந்தப் பிரச்னை வருகிறது. மாதவிடாய் நின்ற ஒருவருக்கு ரத்தப்போக்கு ஏற்படுவது கவலைக்குரிய விஷயம். மாதவிடாய் நின்று ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் திடீரென்று ரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
வருடாந்திர மருத்துவப் பரிசோதனை எப்பொழுது செய்ய வேண்டும். மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவப் பரிசோதனை அவசியம். ஒரே ஒருமுறை சிறிதளவு ரத்தப்போக்கு ஏற்பட்டாலும் அலட்சியம் செய்யக்கூடாது. வலி இல்லாத உதிரப்போக்கு ஏற்பட்டாலோ, வெள்ளைப்படுவது பழுப்பு நிறமாக அல்லது ரத்தம் கலந்ததாக இருந்தாலோ, அது உதிரம் இல்லை என்று நீங்கள் உறுதியாக நினைத்தால் கூட மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
தாம்பத்ய உறவுக்குப் பின்னர் ரத்தக்கசிவு ஏற்பட்டால் கூட மருத்துவரை அணுக வேண்டும்.மாதவிடாய் நின்ற பிறகு புற்றுநோயாலும் மற்றும் பல தீங்கற்ற காரணங்களாலும்
ரத்தப்போக்கு ஏற்படலாம். கருப்பையில் புற்றுநோய் ஏற்பட்ட பெண்கள் மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டுச் சிகிச்சைக்கு வருவோரில் பலருக்கும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் இருக்கும்.
கருப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை உட்புறச் சுவரின் திசுக்கள் மெலிந்து போவது அல்லது தடிமனாவது, கருப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் ஏற்படுவது கருப்பை அல்லது அதைச் சார்ந்த பகுதிகளில் பாலிப் போன்ற திசு வளர்ச்சி இருப்பது, கருப்பை உட்புறச் சுவரில் நோய்த்தொற்று ஏற்படுவது, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று என இந்த ரத்தப்போக்கு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். எனவே, மேலே சொன்னவற்றில் எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
பரிசோதனைகள்
மருத்துவப் பரிசோதனையின்போது, இந்த உதிரப்போக்கு எவ்வளவு நாட்களாக உள்ளது போன்ற விவரங்களும் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளனவா என்பதையும் அறிவார்கள். அதைத்தொடர்ந்து ரத்தப்போக்கின் காரணத்தை அறிய பரிசோதனைகள் செய்யப்படும்.கருப்பை வாய் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை மூலம் ஃபைப்ராய்டு போன்ற கட்டிகள் அல்லது சினைப்பையில் ஏதேனும் கட்டிகள் உள்ளனவா எனப் பார்க்கப்படும்.
கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன் (endometrial thickness) அளவு எடுக்கப்படும். அது 4 மி.மீ. அளவுக்கு மேலாக இருந்தால், புற்றுநோய் அல்லது பாலிப் வளர்ச்சி உள்ளதா எனக் கண்டறிய பயாப்சி பரிசோதனை, டி அண்டு சி நடைமுறை (dilatation and curettage) ஆகியவை செய்யப்படும் அல்லது உள்நோக்கிக் கருவி (hysteroscopy) மூலம் ஆய்வு செய்யப்படும்.
ரத்தப்போக்கின் காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றபடி சிகிச்சை செய்யப்படும். மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை, பிறப்புறுப்பில் க்ரீம் தடவுவது, பிறப்புறுப்பின் வழியே மாத்திரை செலுத்துவது, Hysteroscopy மூலம் சிகிச்சை தருவது, டி அண்டு சி செய்து, கர்ப்பப்பையை அகற்றுவது எனக் காரணத்துக்கு ஏற்றபடி சிகிச்சைகள் மாறுபடும்.
மாதவிடாய் நின்றபிறகு உதிரப்போக்கு ஏற்பட்டால் அதை அவமானமாகக் கருதக்கூடாது. உடனே மருத்துவரை நாடி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நாமே நமது முதல் நலம் விரும்பியாக இருந்து உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவோம்.
மெனோபாஸ் சமயத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்
மெனோபாஸில் பெண்களுக்கு ஒரு நாளில், 1500mg கால்சியம் தேவைப்படுகிறது. வைட்டமின் D மற்றும் மெக்னீசியம் சத்தும் அவசியம் தேவைப்படுகிறது. வைட்டமின் B, A, E, இரும்புச்சத்து மற்றும் Omega 3 கொழுப்பு அமிலங்கள் சோர்வினை நீக்குவதோடு இருதயத்திற்கு வலிமையும் சேர்க்கின்றன.எலும்புகளை வலிமையாக்கும் உணவுகளை மெனோபாஸிற்கு முன்னரே எடுத்துக் கொள்வது சிறப்பு.தினமும் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பயறு வகைகள் மற்றும் தானியங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மெனோபாஸ் பெண்களுக்கான அதிசய உணவு சோயா. “Soy Isoflavones” என்ற இயற்கையான பைட்டோ-ஈஸ்ட்ரோஜன்கள் சோயாவில் அதிகம் காணப்படுகிறது என்பதால், இவர்கள் சோயாவைப் பயன்படுத்தலாம்.சோயாவில் மட்டுமன்றி கொண்டைக் கடலை, பீன்ஸ், மஞ்சள் மற்றும் உலர் பழங்களிலும் இந்த பைட்டோ-ஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை எலும்புகளின் வலிமையை அதிகரிப்பதுடன், இருதய நோய் மற்றும் சில புற்றுநோய்களைத் தடுக்கின்றது.அசைவ உணவு உண்பவர்கள் பால், மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.