*கலெக்டர் வழங்கினார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், உதவி கலெக்டர்(பயிற்சி) அம்ருதா, ஆர்டிஓ ராஜ்குமார், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சூர்யா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
குறைதீர்வு கூட்டத்தில், சுய தொழில் கடனுதவி முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சாலை வசதி, அரசு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 358 பேர் மனு அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், குறைதீர்வு கூட்டத்தில் பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும், உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும், நிராகரிக்கப்படும் மனுக்களான காரணங்களை தெரிவிப்பது அவசியம் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், ஏற்கனவே நடந்த குறைதீர்வு கூட்டங்களில், உதவி உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்த 7 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
கூடுதல் பாதுகாப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, வழக்கம் போல பொதுமக்கள் கொண்டுவந்த பை உள்ளிட்ட பொருட்களை கடுமையாக சோதித்தனர்.
மேலும் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீசார் தொடர் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.