*ரூ.3 கோடிக்கு வர்த்தகம்
சேந்தமங்கலம் : புதன்சந்தையில் நேற்று கூடிய சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்த நிலையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும்.
சந்தையில் மாடுகளை வாங்க மற்றும் விற்க, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருவார்கள். இரண்டு நாட்களில் பல கோடிக்கு வர்த்தகம் நடைபெறும்.
நேற்று கூடிய சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து பால் மாடுகள், இறைச்சி மாடுகள், காளை மாடுகள் என குறைந்த அளவே விற்பனைக்கு வந்திருந்தது.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழக உள் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது.
இறைச்சி மாடுகள் ரூ.27 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ரூ.47 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.