காபூல் : ஆப்கானிஸ்தானில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள்,12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக அடிக்கடி போக்குவரத்து விபத்துகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பேருந்தில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சார்-இ-புல் மாகாணத்தில் தரமற்ற சாலைகள் கொண்ட மலைப் பகுதியில் மினி பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர். இந்த விபத்திற்கு மினி பேருந்து ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றம் சாட்டினர்.