பல்லியா: உத்தரபிரதேசத்தில் மண்டபத்தில் திருமணம் நடத்திய தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய அவலம் அரங்கேறி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ரஸ்ராவில் உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை(மே 30ம் தேதி) ராகவேந்திர கவுதம் என்ற தலித் குடும்பத்தினரின் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று, தலித் இனத்தை சேர்ந்தவர்கள் மண்டபத்தில் எப்படி திருமணம் நடத்தலாம் என கேட்டு இழிவான வார்த்தைகளில் பேசி உள்ளனர்.
மேலும் தடி, இரும்பு கம்பிகளால் திருமண வீட்டாரை பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதில் ராகவேந்திர கவுதமின் உறவினர்களான அஜய் குமார், மனன் காந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து ரஸ்ரா காவல்நிலையத்தில் ராகவேந்திர கவுதம் அளித்த புகாரில், “மல்லா டோலி பகுதியை சேர்ந்த அமன் சாஹ்னி, தீபக் சாஹ்னி, ராகுல், அகிலேஷ் உள்ளிட்டோர் அடங்கிய 20 பேர் கும்பல் வௌ்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் திருமண மண்டபத்துக்குள் நுழைந்து, திருமண வீட்டாரை சாதி ரீதியாக அவதூறாக பேசினர். தொடர்ந்து அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.