Sunday, May 18, 2025
Home செய்திகள்Showinpage எங்களுக்கு தொடர்பில்லை: மீண்டும் மறுத்த பாகிஸ்தான்

எங்களுக்கு தொடர்பில்லை: மீண்டும் மறுத்த பாகிஸ்தான்

by Neethimaan

கராச்சி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருவதுடன், அந்த நாட்டுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதேநேரம் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று நேற்று பாகிஸ்தான் வழக்கம்போல மறுத்து வருகிறது. முன்னதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர், வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் நிருபர்களிடம் கூட்டாக கூறுகையில், ‘எந்த வகையிலான பயங்கரவாதத்தையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது. அப்பாவி மக்கள் உயிரை பறிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.

பஹல்காம் தாக்குதல் உயிரிழப்புகளுக்கு நாங்களும் கவலையை வெளியிட்டு இருக்கிறோம். நாங்களும் எங்கள் இரங்கலை தெரிவித்தோம். பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல், நம்ப முடியாத வேகத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் ஆரம்பத்திலிருந்தே அதைத்தான் கூறி வருகிறோம். பாகிஸ்தானை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும்’ என்றனர்.

ராணுவ தளபதி நீக்கமா? அரசு விளக்கம்
பயங்கரவாத தாக்குதலுக்கு பின், உதம்பூரில் செயல்படும் நம் ராணுவத்தின் வடக்கு படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஆதரவு சமூகவலைதளங்களில் தகவல் பரவின. இதனை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செய்தி தொடர்பு நிறுவனமான பிஐபி மறுத்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இது முன்பே திட்டமிடப்பட்டது. இவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் ஷர்மா புதிய வடக்கு ராணுவ கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை பல பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதள கணக்குகளில் திரித்துள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வ செய்தி ஆதாரங்களை மட்டுமே மக்கள் நம்பும் படி வலியுறுத்துகிறோம்’ என்று கூறியுள்ளது.

3டி வரைபடம் மூலம் என்ஐஏ விசாரணை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. வழக்கு குறித்து முக்கிய ஆவணங்கள், எப்ஐஆர் நகல் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகளிடம் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்டறிய 3டி வரைபடம் மூலம் துப்பறியும் பணியை என்ஐஏ அதிகாரிகள் துவங்கி உள்ளனர்.

உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பயங்கரவாத தாக்குதல் நடந்த பைசரன் மலைப்பகுதியின் 3 டி வரைபடத்தை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலமாக பயங்கரவாதிகள் எந்த வழியாக நுழைந்தனர்? எந்த பக்கமாக வெளியேறினர்? உள்ளிட்ட தகவல்களை கண்டறிய முடியும். பயங்கரவாதிகள் தலைமறைவாக இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கிலாந்து முழு ஆதரவு
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹமீஸ் ஃபல்கனர் பேசியதாவது: பஹல்காம் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு, இங்கிலாந்தின் முழு ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க உதவவும் இங்கிலாந்து முக்கிய பங்காற்றும். இந்த பதற்றம் இங்கிலாந்து தெருக்களில் எதிரொலிக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கவலையளிக்கிறது. தாக்குதல் நடத்திய காஷ்மீரை சேர்ந்த அங்கீத் லவ் (41) மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கடந்த 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். தீவிரவாத தாக்குதல் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி பாகிஸ்தானை இங்கிலாந்து கேட்டு கொள்கிறது. இரு நாடுகளும் பாதுகாப்பாக இருக்க இங்கிலாந்து தனது ஆதரவை அளிக்கும்’ என்றார்.

பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை
தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியுள்ளது. இதன்படி, பாகிஸ்தானில் பதிவு செய்த அனைத்து விமானங்கள், பாகிஸ்தானிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள், ராணுவ விமானங்கள் உள்பட குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களும் இந்திய வான்வெளியில் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையனது, வரும் 23ம் தேதி வரை அமலில் இருக்கும் என இந்தியா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், இரு நாடுகளும் தங்களுடைய வான்வெளியை பரஸ்பரம் பயன்படுத்த முடியாத வகையில், விமானங்களை தடுத்துள்ளன. இந்த தடை பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும். இந்த நடவடிக்கையை கடந்த 6 நாட்களுக்கு முன்பே பாகிஸ்தான் எடுத்திருந்தது. இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடி விமானங்கள் இல்லை. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi