மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த பவுன்ராஜ் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். தற்போது அரசு அதிகாரிகள், அதனை நீர்நிலை ஆக்கிரமிப்பு என கூறி வீட்டை இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணி துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து, எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், ‘மனுதாரர் விராட்டிப்பத்தில் உள்ள புதுக்குளம் கண்மாய் நீர்நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்துள்ளார். அதற்கு பட்டா வழங்க வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கதல்ல என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘நீர்நிலையை ஆக்கிரமித்து பட்டா வேண்டும் என கோருவது ஏற்கத்தக்கதல்ல.
மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க வருவாய்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், விராட்டிப்பத்தில் புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதியில் மனுதாரர் மட்டுமின்றி பலர் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.