சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,615 கன அடியில் இருந்து 19,286 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், 44வது ஆண்டாகவும், ஜூன் மாதத்தில் 66 ஆண்டுக்கு பிறகு 2வதாகவும், கடந்த 29ம் தேதி முழுமையாக நிரம்பி 120 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 31,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 18,615 அடியாக சரிந்தது. இந்நிலையில் இன்று அணையின் நீர்வரத்து 18,615 கன அடியில் இருந்து 19,286 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 24,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 22,100 கன அடி நீர் திறக்கபப்டுகிறது.