*அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து, மணியாச்சி சாலையில் ஓசனூத்து கிராமத்திற்கு மேற்கு பகுதியில் செல்லத்தாய் என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டம் அருகில் செல்லும் விளாத்திகுளம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெயரளவில் உடைப்பு சரி செய்தபோதும் மறுநாளிலேயே அதன் அருகே மற்றொரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் கடந்த 3 மாதங்களாக அதில் இருந்து வெளியேறும் குடிநீரானது வெள்ளமாக பெருக்கெடுத்தபடி காட்டுப் பகுதியில் வீணாக செல்வதோடு அப்பகுதியில் உள்ள தனி நபரின் விவசாய நிலத்தில் சுமார் 20 சென்ட் அளவு நிலத்திற்கு மேல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் குளம்போல நீர் தேங்கிநிற்கிறது. இதனால் அங்கு பள்ளமும் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து தெரிவித்தும் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்யாததால் பல கிராமங்களுக்கு கோடைக்காலமான தற்போதைய சூழலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் பலரது தாகத்தை தீர்த்துவரும் தாமிரபரணி தண்ணீரானது விளாத்திகுளம் பகுதி மக்களின் தாகத்தை முற்றிலும் தீர்த்து வைப்பதில் தடையை சந்திக்கிறது.எனவே, இனியாவது இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். மேலும் இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.