அரவக்குறிச்சி : கொத்தம்பாளையம் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரவக்குறிச்சி தாசில்தார் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது.
இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரானது கரூர் மாவட்டத்தில் சுமார் 54,637 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. தற்போது அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தம்பாளையம் தடுப்பணை நிரம்பி வருகிறது.
இதனால் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அரவக்குறிச்சி வட்டாட்சியர் மகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.