சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தூய்மை இயக்கத்தின் கீழ் செயல்படும் தூய்மை தமிழ்நாடு நிறுவனம், மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக மற்றும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும் அவற்றை மறுசுழற்சி செய்யவும் ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
இதை தொடர்ந்து அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்களையும் மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களையும் தேர்வு செய்து அவற்றின் பட்டியல்கள் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் https://thooimaimission.com/partnerships என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுதுணையாகவும் முறைசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்தும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கழிவுகளை மறுசுழற்சி செய்வதையும் அப்புறப்படுத்துவதையும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.