Friday, June 13, 2025
Home செய்திகள் போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்: வெளிநாட்டு வீரர்கள் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம்

போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்: வெளிநாட்டு வீரர்கள் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம்

by Karthik Yash

போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி நாளை மீண்டும் தொடங்க உள்ளது. ஐபிஎல் 18வது தொடரின் 58வது லீக் போட்டி கடந்த 8ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் நடந்தது. இதில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் 10.1 ஓவர் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 எடுத்திருந்த நிலையில், திடீரென மைதானத்தில் இருந்த மின்விளக்குகள் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. முதலில் தொழில்நுட்ப கோளாறால் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன என்று கூறப்பட்டது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் தொடங்கியதால் எல்லையோர பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் அவசர அவசரமாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

குறிப்பாக ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதி மற்றும் மலைப்பிரதேசங்களில் உள்ள விமான நிலையங்கள் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். போர் பதற்றம் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்ததால் ஐபிஎல் தொடர் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது என ஆலோசனைக்கு பின் பிசிசிஐ அறிவித்தது. இருநாடுகளுக்கு இடையே தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, ஐபிஎல் போட்டி மே 17ம் தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி ஐபிஎல் போட்டி நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. மீதமுள்ள 17 போட்டிகள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகிய 6 மைதானங்களில் மட்டும் நடக்க உள்ளது. குவாலிபயர் – 1, எலிமினேட்டர், குவாலிபயர் – 2, இறுதி போட்டி எந்த மைதானங்களில் நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டதால் பாதுகாப்பு கருதி வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடுக்கு திரும்பினர். 10 நாட்களுக்கு பின் மீண்டும் ஐபிஎல் போட்டி நாளை தொடங்க உள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா திரும்பி வருகின்றனர்.

பெங்களூரு அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களான பில் சால்ட், டிம் டேவிட், பெத்தேல் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியேர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளதால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தெ.ஆப்ரிக்கா ஆகிய அணிகளின் வீரர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட மூன்று நாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதால் அந்த அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணி தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி,‘வீரர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு எந்த தடையும் இல்லை. அதனால் அவர்கள் மீண்டும் இந்தியா சென்று விளையாடி இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக பயிற்சி முகாமுக்கு திரும்பி விடுவார்கள்’ என்று கூறி உள்ளார். இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்பதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தெ.ஆப்ரிக்கா பயிர்சியாளர்கள் தங்களது வீரர்கள் திருப்பி அனுப்புங்கள் என்று அடம் பிடிப்பதால் அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது. இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் பங்கேற்க உள்ளதால் அவர்களும் ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவார்கள் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

பிளேஆப் சுற்றுக்கு வாய்ப்பு இல்லாத அணிகள் இன்னும் 2 முதல் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டியுள்ளது.இதனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்காத வெளிநாட்டு வீரர்கள் உள்பட சில வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சொந்த காரணத்தை காட்டி விலக இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, சொந்த காரணத்திற்காக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், டெல்லி அணியில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் ஜேக் ப்ரேசர் மெக்குர்க் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். குஜராத் அணியில் இருந்து ஜாஸ் பட்லர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறி உள்ளார். இவருக்கு பதிலாக இலங்கை வீரர் குசல் மெண்டீஸை குஜராத் அணி ஒப்பந்தம் செய்து உள்ளது. சொந்த காரணங்களுக்காக வீரர்கள் அடுத்தடுத்து விலகல், வெளிநாட்டு வீரர்கள் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்காததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களை எடுத்து கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி தந்து உள்ளது.

இதனால் வெளியேறி வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்களை அந்தந்த அணிகள் ஒப்பந்தம் செய்து வருகிறது. ஆனால், போட்டி ஒத்திவைக்கப்படுவதற்கு முன் மாற்று வீரர்களாக கொண்டு வரப்பட்டவர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு ஏலத்தில் தக்க வைக்க முடியும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு 7 அணிகள் போட்டி போடும் நிலையில், முக்கியமான கட்டத்தில் வெளிநாட்டு வீரர்கள் வெளியேறியதால் ரசிகர்கள் வெறுத்து போயி உள்ளனர்.

* பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?
நடப்பு ஐபிஎல் தொடருக்கான பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் வெளியேறி உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கான 4 இடங்களுக்கு மீதமுள்ள குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ ஆகிய 7 அணிகள் போட்டா போட்டி போட்டு வருகிறது. இதில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு 2 போட்டிகள் மட்டுமே எஞ்சி உள்ளது. மற்ற அணிகளுக்கு 3 போட்டிகள் எஞ்சி உள்ளது.குஜராத், பெங்களூர், பஞ்சாப் ஆகிய அணிகள் கிட்டதட்ட பிளே ஆப் சுற்றை உறுதி செய்து உள்ளனர்.

இந்த அணிகளும் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்து விடுவார்கள். மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளும் வெற்றி பெற வேண்டும். டெல்லி, லக்னோவுக்கு 3 போட்டிகள் உள்ளது. இதில் இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மும்பை அணியின் வெற்றி, தோல்வியை பொறுத்தே பிளே ஆப் சுற்று வாய்ப்பு உள்ளது. மும்பை அணி ரன் ரேட்டில் அதிகமாக உள்ளதால் மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே சுற்றுக்கு முன்னேறிடும். இதனால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போவது யார் என்று பரபரப்பு எழுந்து உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi