Tuesday, June 17, 2025
Home செய்திகள்Showinpage வக்பு திருத்த சட்டம் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கிறதா?: உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக நடந்த விவாதம்

வக்பு திருத்த சட்டம் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கிறதா?: உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக நடந்த விவாதம்

by Suresh

புதுடெல்லி:ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டம் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கிறதா? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ளது. நாடாளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 140 வழக்குகள் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘வக்பு வழக்கு விவகாரத்தில் மூன்று முக்கிய விஷயங்களை உச்ச நீதிமன்றம் எழுப்பி இருந்தது. அதற்கு எங்களது தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரத்தின் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் எழுப்பப்பட்ட மூன்று விஷயங்களில் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ‘வக்பு சட்ட திருத்தம் பாதுகாப்பானது என்று ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் வக்பை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயல்படுகிறார்கள். வக்பு என்பது இறைவனுக்கு (அல்லா) கொடுக்கப்படுவது ஆகும். அப்படி செய்வதை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. ஒருமுறை வக்பு என அறிவிக்கப்பட்டால், அதை எந்த காலத்திலும் மாற்ற முடியாது. மசூதிகளை தொடர்ந்து பராமரிப்பது, இஸ்லாமியர்களுக்கான இடுகாடுகளை அடையாளம் காண்பது ஆகியவற்றை அரசுகளால் செய்து தர முடியாது. இவை அனைத்திற்கும் தனியார் நிலங்கள் தான் தேவைப்படுகிறது. அதனால் தான் தங்களது வாழ்க்கையின் இறுதி காலத்தில் தங்களது நிலம் உள்ளிட்ட சொத்துகளை வக்புக்காக இஸ்லாமியர்கள் வழங்குகிறார்கள். சட்ட விதிகள் எதனையும் பின்பற்றாமல் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத நம்பிக்கையை கெடுக்கும் விதமாக, வக்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘முந்தைய சட்டத்தின் கீழ் வக்பு பதிவு செய்யாததற்கு குறிப்பிட்ட விளைவுகள் எதுவும் வழங்கப்படவில்லை. மனுதாரரின் சமர்ப்பிப்பை உச்ச நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது’ என்று கூறினார். மீண்டும் வாதத்தை தொடர்ந்த கபில் சிபல், ‘இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி கூறியது சரியே. ஆனால் தற்போதைய வக்பு சட்ட திருத்தம் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் விலகி உள்ளது. வக்பை பதிவு செய்வதற்கு முத்தவல்லி தான் பொறுப்பு; இருப்பினும் பதிவு செய்யாதது வக்பின் தன்மையை பாதிக்கவில்லை. தற்போதைய சட்ட திருத்தம் அந்த தன்மையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. தற்போதைய சட்டம், பழங்கால நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டால், அந்த சொத்தை முழுமையாக கையகப்படுத்தவு, உரிமையாக்கவும் அனுமதிக்கிறது’ என்றார்.  அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 2அப்படியென்றால் தற்போதையை வக்பு திருத்த சட்டம் உங்களது உரிமையை பறிக்கிறது என்று நாங்கள் பதிவு செய்து கொள்ளலாமா?’ என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கபில் சிபல், ‘அதனை தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு அதனை நிராகரித்து வருகிறது. குறிப்பாக 1904 மற்றும் 1958 ஆகிய சட்டங்களின் கீழ் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமை என்பது பாதுகாக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை அதற்கு தலைக்கீழாக இருக்கிறது. பழைய புராதான சின்னங்கள் வக்பு சொத்துகளாக இருந்து வருகிறது. ஆனால் அவை பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக அந்த இடங்களை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும் விதமாக தற்போது இந்த புதிய சட்டத்தின் மூலம் வழிவகுத்துள்ளது. இத்தகைய பாதுகாக்கப்பட்ட பல இடங்கள் தற்பொழுதும் வழிபாட்டு தலங்களாக இருந்து வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் வக்பை உருவாக்க வேண்டும் என்றால், ஐந்து ஆண்டுகள் இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என ஒரு கட்டுப்பாடு இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால அளவை யார் முடிவு செய்வது?. ஒருவேளை இறக்கும் தருவாயில் இருக்கும் போது வக்பை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று வைத்துக்கொண்டால், அதற்கு நான் இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இது அரசியல் சாசன விதிமுறைகளுக்கு முழுமையாக எதிராக உள்ளது.

அடுத்ததாக பழங்குடியினர் வக்பு சொத்துகளை கொடுக்க முடியாது என சொல்லப்படுகிறது. பழங்குடியினராக இருக்கும் ஒருவர், இஸ்லாமியராக மாறியதற்கு பிறகு தனது மதக் கடமையை அவர் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதற்கு இந்த புதிய சட்டம் தடையாக உள்ளது. சுதந்திரமாக மதத்தை கடைபிடிக்கலாம் என்ற அடிப்படை உரிமையை, இது மீறும் வகையில் இருக்கிறது. வக்பு நிர்வாகக் குழுவில் இஸ்லாமியர்கள் இல்லாத ஒருவரை கொண்டு வருகிறார்கள்; அதுவும் இஸ்லாமியர்களை விட இஸ்லாமியர்கள் அல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை தான் அந்த குழுவில் அதிகமாக இருக்கின்றது. முன்பு இது தேர்தல் வகையில் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நியமனம் வாயிலாக உறுப்பினர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வகுப்பை நிர்வகிக்கும் உரிமையும் இஸ்லாமியர்களுக்கு பறிக்கப்படுகிறது.

இந்த புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் வக்பு சொத்து விவகாரங்களில் ஒரு முடிவு எடுக்கிறார் என்றால், அதை நீதிமன்றத்தில் சென்று முறையிட வேண்டும். ஆனால் அந்த கால நேரத்திற்குள் புதிய சட்டத்தின் கீழ் வக்பு சொத்துக்கள் முழுமையாக அபகரிக்கப்பட்டிருக்கும்’ என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘நீதிமன்றங்களில் இந்த விவகாரம் விசாரணைக்கு இருக்கும் நேரத்தில், வக்பு சொத்து என்ற அந்தஸ்து பறிபோய்விடுமா?’ என்று மீண்டும் கேள்வியெழுப்பினார். அதற்கு வழக்கறிஞர் கபில் சிபல், ‘ஆம்’ என்று பதிலளித்தார். தொடர்ந்து வக்பு திருத்த சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக நடைப்பெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi