மதுரை: பணம் பெற்றுக்கொண்டு சாதிச்சான்று வழங்கியதாக எழுந்த புகாரில் மதுரை பெண் ஆர்டிஓ காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மதுரை மாவட்டத்தில் ஒரு சமூகத்தினருக்கு பழங்குடியினர் என்ற சாதிச்சான்று வழங்க தலா ரூ.30 ஆயிரம் வீதம் பெற்று நூற்றுக்கணக்கான சான்றிதழ் வழங்கியதாகவும், இதற்காக பல லட்சம் பெற்றதாக மதுரை பெண் ஆர்டிஓ சுகி பிரேமலா மீது குற்றச்சாட்டு கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது.
இதுகுறித்து மதுரை கலெக்டர் சங்கீதா விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து நேற்று சுகி பிரேமலா, ஆர்டிஓ பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மேலூர் ஆர்டிஓ பிர்தவ்ஸ் பாத்திமாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.